

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
9-ந் திருவிழாவான கடந்த 5-ந் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு சுவாமிகள் சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி தெப்பத்திற்கு வந்தனர்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 11 முறை வலம் வந்தனர். ஒவ்வொரு முறையும் மங்கள இசை, வேத மந்திரம், பதிகம் பாடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.