என் மலர்tooltip icon

    வழிபாடு

    இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் திருவண்ணாமலை பெருமாள்
    X

    இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் திருவண்ணாமலை பெருமாள்

    • ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.
    • வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது.

    ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து திருப்பதிக்கு திரும்ப முடிவு செய்தார், வெங்கடாசலபதி. எனினும் ஆண்டாள் அவரை தடுத்து, இத்தலத்தில் தங்கி தனக்கும், இங்குள்ள மக்களுக்கும் அருள்பாலிக்குமாறு வேண்டிக் கொண்டாள்.

    ஆண்டாளின் வேண்டுக்கோளை ஏற்று, இந்த மலையின் உச்சியிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார், வெங்கடாசலபதி.

    திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர். ஆதலால் இந்த தலத்தை 'தென்திருப்பதி' எனவும் பக்தர்கள் அழைப்பர்.

    மலையின் மேல் உள்ள பெருமாள் சன்னிதியை அடைய 150-க்கும் மேற்பட்ட படிகளை ஏறி செல்ல வேண்டும். இங்குள்ள பெருமாள் ஒன்பதடி உயர திருமேனியுடன் அற்புதமாக காட்சி தருகிறார். திருப்பதியில் இருப்பது போன்றே நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோர் உள்பட பல்வேறு சன்னிதிகள் இங்குள்ளன. மலை அடிவாரத்தில் தாமரை மலர்கள் நிறைந்த 'கோனேரி தீர்த்தம்' உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

    வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆதலால் வழக்கில் ஏதேனும் செல்வத்தை இழக்கும் சூழ்நிலை வந்தால் பக்தர்கள் இந்த குன்றின் மேல் உள்ள பெருமாளை மனமுருக வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல்களும் உடனே நிறைவேறி விடும். திருப்பதியை போல பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்க இங்கு வருகின்றனர். இந்த கோவிலில் கோ தானம் செய்வது சிறப்பு.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் முதல் விளைப்பொருட்களான நெல், பருத்தி, மிளகாய் மற்றும் பயறு வகைகளை சீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துவர். இந்த கோவிலில் உள்ள பெருமாளை வேண்டினால் சகல பாக்கியங்களையும் தந்து வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல மாதந்தோறும் பவுர்ணமியன்று கருடசேவை நிகழ்ச்சி நடக்கும். சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் இந்த பெருமாள் குல தெய்வமாக விளங்குகிறார்.

    இந்த கோவில் நடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.

    Next Story
    ×