ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா தேரோட்டம்: பெண்கள் மட்டுமே வடம் பிடித்தனர்

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது.
தேரை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி. (உள்படம் : சிறப்பு அலங்காரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன்)
தேரை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி. (உள்படம் : சிறப்பு அலங்காரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன்)
Published on

தஞ்சை மாவட்டம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அறம்வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. ஓம் சக்தி... என பக்தி முழக்கங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேரை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

தேரானது பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தருமை ஆதீன 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி சொக்கநாத தம்பிரான் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com