திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 25-ந் தேதி தொடங்குகிறது

தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது. 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம்நடக்கிறது.
திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 25-ந் தேதி தொடங்குகிறது
Published on

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 6 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து உபநாச்சியாருடன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

பின்னர் 26-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சேஷ வாகனம், தங்க கருட சேவை, ஹனுமந்த வாகனம், யானை வாகனம், புண்ணிய கோடி விமானம், குதிரை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், 2-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு கோபுர வாசலில் தீர்த்தவாரி நடக்கிறது. இதையடுத்து 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com