

கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த சோமவார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல திருவெண்காடு அருகே நாங்கூர் நம்புவோருக்கு அன்பர் கோவிலில் சோமவார வழிபாடு நடந்தது. முன்னதாக சாமி, அம்மனுக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.