பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் இன்று தேரோட்டம்

10-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி
பூதப்பாண்டி பூதலிங்கசாமி
Published on

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இது மிகப்பழமையான குடவரை கோவிலாகும். இந்த கோவில் தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

காஞ்சியில் நிலமாகவும், திருவானைக்காவலில் நீராகவும், திருவண்ணாமலையில் தீயாகவும், காளகஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் விண்ணாகவும் சிவபெருமான் வணங்கப்படுகிறார். இந்த பஞ்ச பூதங்களும் வழிபட்ட தலமாக பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் விளங்குகிறது. சிவன் கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் நடக்கும். ஆனால் இந்த கோவிலில் அமாவாசையன்று கிரிவலம் நடக்கிறது. அமாவாசை கிரிவலம் செல்ல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு, சித்திரைத் திருவிழா, தை பெருந்திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தைத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு தைத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பூஜை, இரவு 9 மணிக்கு சாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் வலம் வருதல் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் இரவு சாமியும், அம்பாளும் கைலாசபர்வத கற்பக விருட்சக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

9-ம் நாள் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் தேரில் விநாயகர், சாமி, அம்பாள் எழுந்தருளச் செய்து அரசின் வழிகாட்டுதலின் படி வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரர் பக்தர்கள் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com