

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆவணி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்றுகாலை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனை மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.