சிவராத்திரி இரவு இந்த கதையை படியுங்கள்...

நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவராத்திரி இரவு இந்த கதையை படியுங்கள்...
Published on

'அந்த காலத்தில் ராமபிரான் வனவாசம் செய்த தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் இருந்த பொய்கைக்குக் கலசரஸ் என்று பெயர். அந்த குளத்தின் கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் வித்வஜிஹ்மர்.

அவரைப் பார்க்க கவுஸ்திமதி என்ற ரிஷி வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.

'இந்தச் சிறிய வயதில் நீங்கள் துறவியாக இருப்பது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களுடைய சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்' என்று வித்வஜிஹ்மரிடம் கேட்டார்.

'சம்சாரங்கர பந்தத்தில் அகப்பட்டு என்னுடைய வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தை என்று கஷ்டப்பட விரும்பாமல் தானே நானே என்னுடைய அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்கிறேன். ஆனாலும் என்னுடைய கர்மா விடவில்லையே என்றார் வித்வஜிஹ்மர்.

'நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்! நம்மைப்படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செய்திருக்கிறார்கள்.

உங்களின் பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோடு என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவர்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி.

அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

அதற்கு 'மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா? அவர்கள் ஏன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்தார்கள்?. அதற்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார் வித்வஜிஹ்மர்.

கவுஸ்திமதி முனிவர் தன்னுடைய தவ வலிமையைப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.

அதற்கு நாராயணன் 'நாரதனும் ஒருசமயம் என்னுடைய மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின் எனும் ஒருத்தியோடு கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கிறான். ஸ்ரீமதியுடைய சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.

அதே போல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனுடைய சாபத்தை பெற்றிருக்கிறார்கள். காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பது கடினம் என்று அவர்கள் ஒருநாளும் நினைக்கவில்லையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.

துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான 5 மந்திரங்களைத் தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா? மகாலட்சுமியுடைய கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம் என்று பிரம்மா நினைத்தார்.

லட்சுமி இதை விரும்பாத காரணத்தினால் நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்' என்று போய் ஜிஹ்மரிடம் சொல், அவர் வசுமதியைக் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்வார் என்று சொல்லி அனுப்பினார்.

பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மரிடம் அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது.

கவுஸ்திமதி ரிஷி, மகளை விட்டுப் பிரியும் போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார். வித்வ ஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.

அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராக பாத்திருக்கிறாள்.

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com