

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பஞ்ச கருட சேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்படும்.
இந்நாளில் அம்மாப் பேட்டை பாவநாராயணசாமி கோவில் உற்சவர், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உற்சவர், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உற்சவர், 2 வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவில் உற்சவர், கோட்டை அழகிரிநாதசாமி கோவில் உற்சவர் ஆகிய கோவில் களின் உற்சவர்கள் சந்திக்கும், பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி கோட்டை மைதானத்தில் நடைபெறுவது வழக்கம்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பொதுவெளியை தவிர்த்து கோவில்களில் பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்படி நேற்று காலையில் அம்மாப்பேட்டை பாவநாராயணசாமி கோவிலும், செவ்வாய்ப் பேட்டை பிரசன்ன வெங்கடா சலபதி கோவிலிலும், மாலையில் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலிலும், 6 மணிக்கு அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவிலிலும் பஞ்ச கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நீராட்டம், கட்டியம் சேவித்தல், 10.30 மணிக்கு திருககல்யாண விசேஷ அலங்காரம், உள்புறப்பாடு, மாலை மாற்றுதல், 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசையுடன் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அழகிரிநாதர் பெருமாளுக்கு சாத்துப்படி செய்தல், 11.30 மணிக்கு திருக்கல்யாண மஹோத்சவமும் சாற்று முறையும் நடைபெறுகிறது.