பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் கடைசி கார்த்திகை சோமவார விழா இன்று நடக்கிறது

திருவிழா முடிந்த பிறகு ஆலமரத்தில் இலை இல்லாமல் வெறும் மரம் மட்டுமே நிற்பதை காணமுடியும். பக்தர்கள் வருவதற்கு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் கடைசி கார்த்திகை சோமவார விழா இன்று நடக்கிறது
Published on

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரக்கலக்கோட்டை கிராமத்தில் மத்தியபுரீஸ்வரர் என்னும் பொதுஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற திங்கட்கிழமைகள் சோமவார திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் 21,28-ந்தேதி முதலாவது, 2-வது சோமவாரமும், டிசம்பர் 5-ந்தேதி 3-வது சோமவாரமும் நடைபெற்று முடிந்தது. இன்று(திங்கட்கிழமை) கடைசி கார்த்திகை சோமவாரவிழா நடைபெறுகிறது.

இந்த சோமவாரத்தின் போது, மூர்த்தி தல விருட்சமாக அமைந்துள்ள ஆலமரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் பிரசாதமாக பக்தர்கள் கொண்டு செல்வார்கள். திருவிழா முடிந்த பிறகு ஆலமரத்தில் இலை இல்லாமல் வெறும் மரம் மட்டுமே நிற்பதை காணமுடியும். கடைசி சோமவாரத்தில் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் ஆடு, மாடு, கோழி, நெல், நவதானியங்கள், தேங்காய், மாங்காய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் காணிக்கையாக கொண்டு வந்து கோவிலில் கொடுத்து வழிபடுவர்.

இதுபற்றி கோவில் செயல்அலுவலர் வடிவேல் துரை கூறுகையில், இந்த விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதற்கு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் நடக்கும் சோமவாரவிழாவில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com