பிள்ளையார்பட்டி கோவிலில் 1,008 கலசாபிஷேக விழா நாளை தொடங்குகிறது

இந்த விழா நாளை தொடங்கி 7 நாட்கள் வரை நடக்கிறது. 15-ந்தேதி நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.
பிள்ளையார்பட்டி கோவிலில் 1,008 கலசாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
Published on

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இதையடுத்து உலக மக்கள் நோய், நோடியின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி நாளை(புதன்கிழமை) 1,008 கலசாபிஷேக விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 7 நாட்கள் வரை நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளது.

இதற்காக கோவிலின் கிழக்கு கோபுரம் எதிரே பிரமாண்ட முறையில் யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா நாளை காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 14-ந் தேதி காலை சாந்தி ஹோமம், திரச ஹோமமும் மாலை 5.30 மணிக்கு ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம் நடக்கிறது.

15-ந்தேதி காலை 8.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. 16-ந்தேதி காலை 8.30 மணிக்கு தீர்த்தஸங்க்ரஹணம் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு 8.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் நடைபெறுகிறது. தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடக்கிறது.

17-ந்தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 6 மணிக்கு 3-வது கால யாகசாலை பூஜைகளும், 19-ந்தேதி காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜைகளும் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி காலை 8.30மணிக்கு 6-வது கால யாக பூஜைகளும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும் 1008 கலசாபிஷேக யாகசாலை நிகழ்ச்சியின் போது திருமறை, திருமுறை பராயணங்களும், சிறப்பு நாதஸ்வர மேளம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com