பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த தங்கரத புறப்பாடு

ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த தங்கரத புறப்பாடு
Published on

பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஆடி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார்.

பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் தங்கரத புறப்பாடு நடந்தது.

கார்த்திகை உற்சவத்தையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலையிலேயே அடிவாரம், கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் தரிசன வழிகளில் கூட்டம் அலைமோதியது.

ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்இழுவை ரெயில் மூலம் செல்ல ரெயில்நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

கார்த்திகை உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, மலர் காவடி உள்ளிட்ட காவடி எடுத்து பழனி கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com