

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழா, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல் நடைபெற்றவுடன் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது.
அதன்பின்னர் நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவமும், நேற்று தெப்ப உற்சவமும் நடந்தது. இதையொட்டி கோவிலில் அம்மனின் கருவறைக்கு முன்பு தெப்பம் அமைக்கப்பட்டது. அந்த தெப்பத்தில் மல்லிகை, முல்லை, ரோஜா, தாமரை மலர்கள் மிதக்க கோட்டை மாரியம்மன் அனந்த சயன கோலத்தில் இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். மேலும் கோட்டை மாரியம்மனின் தெப்பத்திருவிழாவுடன் இந்த ஆண்டு மாசித்திருவிழா நிறைவு பெற்றது.