திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஸ்ரீயாகம்

50 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த யாகம் வருகிற 27-ந்தேதி வரை டி.வி.யில் ஒளிபரப்பப்படுகிறது.
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் உலக நன்மைக்காக யாகம் நடந்த காட்சி.
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் உலக நன்மைக்காக யாகம் நடந்த காட்சி.
Published on

உலக நன்மைக்காகவும், மக்கள் சுபிட்சமாக வாழ ேவண்டியும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் 7 நாட்கள் ஸ்ரீயாகம் நடக்கிறது. இந்த ஸ்ரீயாகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் கோவிலின் பிரதான அர்ச்சகர் வேம்பள்ளி சீனிவாசன் தலைமையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீயாக நிகழ்ச்சிகள் தொடங்கியது. மதியம் 1 மணி வரை யாக சாலையில் சங்கல்பம், ஹோமங்கள், அக்னி பிரதிஷ்டை, நித்யபூர்ணாஹுதி, நைவேத்தியம், மகாமங்கள ஆரத்தி நடந்தது.

அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீயாகம் ஹோமங்கள், லகுபூர்ணாஹுதி, மகாநிவேதனம், மகாமங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பிறகு உற்சவர் பத்மாவதி தாயாரை கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

ஸ்ரீயாகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, கோவில் உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் குடும்பத்தினர் சார்பில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு 34 கிராம் எடையிலான தங்க ஆரம் காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த ஆரத்தை பெற்ற அர்ச்சகர்கள் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அணிவித்தனர். ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com