தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்: திரளானோர் பங்கேற்பு

பிப்ரவரி 22-ந் தேதி தவக்காலம் தொடங்கியது.தவக்காலம் 4-வது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் "லூர்து" நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

கடந்த மாதம்(பிப்ரவரி) 22-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். இந்த தவக்காலத்தில் இறைச்சி உண்ணாமலும், அடுத்தவர்களிடம் அன்பாகவும் இருப்பார்கள்.

தவக்காலம் 4-வது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நேற்று முன்தினம் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. அப்போது ஏசு, சிலுவையில் அறையும்போது 14 நிலையில் பட்டபாடுகளை பாதிரியார்கள் எடுத்து கூறினர்.

ஊர்வலம் பேராலய மேல் கோவிலில் இருந்து புறப்பட்டு மாதா குளம் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிபங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், அருள் சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com