பிரம்மோற்சவ விழா: காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாளை வெள்ளித் தேரோட்டம்

6-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.8-ந்தேதி விஸ்வரூப தரசனம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா: காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாளை வெள்ளித் தேரோட்டம்
Published on

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை வேளைகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

7-ம் நாள் விழா உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ரோஸ் நிற பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் மல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலையில் அருகே எழுந்தருளினார்.

8-ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. லட்சுமி சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்பிகையும் இணைந்து தேரில் மங்கள மேள வாத்தியங்களுடன் காஞ்சீபுரம் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே காஞ்சீபுரம் சங்கர மடத்தில் எழுந்தருளினார்.

மடத்தின் வாயிலில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தேரில் கோவிலுக்கு எழுந்தருளினார்.

இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10-ம் நாள் விழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. இதில் வெள்ளித் தேரில் காமாட்சி அம்மன் பவனி வருகிறார். இது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். வருகிற 6-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி அம்மன் தங்க காமகோடி விமானத்தில் பவனி வருகிறார். 8-ந் தேதி காலையில் விஸ்வரூப தரசனம் நடக்கிறது. இரவு விடையாற்று உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com