பைரவர் வழிபாடும்.. பலன்களும்..

பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம்.பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
பைரவர் வழிபாடும்.. பலன்களும்..
Published on

பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.

தீபம்

சிறு வெள்ளைத் துணியில் மிளகை வைத்து அதை சிறிய முடிச்சாக கட்டி, அதை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் இட்டு பைரவர் முன்பாக தீபம் ஏற்றினால், எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம்.

சந்தன காப்பு

பைரவருக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் போன்றவற்றை சந்தனத்துடன் சேர்த்து தயார் செய்வார்கள். இந்த சந்தன காப்பை பைரவருக்கு சாத்தி வழிபட்டு வந்தால், தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு, பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.

நைவேத்தியம்

பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

மாலைகள்

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

X

Maalai Malar
www.maalaimalar.com