சித்தூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் 19-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழா

20-ந்தேதி மகா கும்பாபாளையம் உற்சவம் நடக்கிறது.24-ந்தேதி சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
சித்தூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் 19-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழா
Published on

சித்தூர் நகரில் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் மயானக் கொள்ளை திருவிழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து கோவில் தர்மகத்தா கே.எம்.குமார் கூறியதாவது:-

சித்தூர் நகரம் குறவப்பாநாயுடு தெருவில் சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 220 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியதாகும். அந்தப் பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயானக் கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். மயானக் கொள்ளை திருவிழா 190 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை நடக்கிறது. 19-ந்தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை, சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அங்காள பரமேஸ்வரியம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி சித்தூரில் உள்ள நீவா நதிக்கு செல்கிறார். அங்கு நடக்கும் மயானக் கொள்ளை திருவிழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

20-ந்தேதி மாலை 6 மணிக்கு மகா கும்பாபாளையம் உற்சவம் நடக்கிறது. அன்று இரவு அம்மன் குறத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

விழாவில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் குறைகளை அம்மனிடம் தெரிவித்து அரிசியை காணிக்கையாக வழங்குவார்கள்.

24-ந்தேதி காலை 7 மணிக்கு சாந்தி அபிஷேகம், காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு அரிசி, விபூதி, குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நடப்பதால் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கோவில் அர்ச்சகர் பி.குமார் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com