கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபாடு

பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது.சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர்.
பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டபோது எடுத்த படம்.
பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டபோது எடுத்த படம்.
Published on

கல்லிடைக்குறிச்சி உலோபா முத்திரை உடனுறை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது.

7-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7 மணிக்கு பச்சை சாத்தி வீதி உலாவும் நடைபெற்றது, பின்னர் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

பால்குட ஊர்வலத்துக்கு முன்பு அலங்காரம் செய்யப்பட்ட யானையுடன் வடிவாம்பிகை வழிபாட்டு குழு சார்பில் சிவனடியார்கள் இணைந்து தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர்.

இந்த ஊர்வலம் தலச்சேரி மானேந்தியப்பர் கோவில், பிள்ளையார் கோவில், சுப்பிரமணிய சாமி கோவில்களை கடந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. இதில் ஆண் பக்தர்கள் அங்க பிரதட்சணமும், பெண் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரமும் செய்து சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.

மதியம் 1 மணிக்கு மேல் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும், மாலை 4 மணிக்கு அன்னம் சொரிதலும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு புஷ்ப அலங்கார மின்னொளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதிஉலா வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் குமார கோவில் தெற்கு ரதவீதியில் அகஸ்தியருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com