சங்கரநாராயண சுவாமி ஆடித்தபசு காட்சி: பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இன்று (வியாழக்கிழமை) சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இரவு 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
சங்கரநாராயண சுவாமி ஆடித்தபசு காட்சி: பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.

சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை-மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா இந்த ஆண்டு கடந்த ஜூலை 31-ந் தேதி காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேரோட்டம் கடந்த 8-ந்தேதி காலை நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி பதினோன்றாம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 12.30 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 5.15 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு தெற்கு ரத வீதியில் உள்ள தபசு பந்தலுக்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து தபசு மண்டபத்தில் இருந்த அம்பாள் 6.15 மணிக்கு தபசு பந்தலுக்கு வந்தார். இதையடுத்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.40 மணிக்கு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.

கோலாகலமாக நடந்த இதை கண்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் வீசினர். பக்தர்கள், `சங்கரா, நாராயணா' என பக்தி கோஷம் எழுப்பினர்.

திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

திருவிழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில், கூடுதல் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர், டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாஸ், தாலுகா இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆடித்தபசு திருவிழா ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலைய துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

12-வது திருநாளான இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இரவு 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com