விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 2000 பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 2000 பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை
Published on

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com