மருதமலை முருகன் கோவிலில் 160 அடி உயர முருகன் சிலை-அமைச்சர் சேகர்பாபு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.
மருதமலை முருகன் கோவிலில் 160 அடி உயர முருகன் சிலை-அமைச்சர் சேகர்பாபு
Published on

வடவள்ளி:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.

மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.

தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com