கார்த்திகை பிரம்மோற்சவம்: கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான கல்ப விருட்ச, இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகை பிரம்மோற்சவம்: கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பலர் சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். கேரள செண்டை மேளம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து 2 மணிவரை கோவிலுக்குள் உள்ள ஸ்ரீகிரு‌ஷ்ணர் மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10.30 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதிஉலாவில் திருப்பதி இணை அதிகாரி போலா.பாஸ்கர், கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி, கோவில் அதிகாரிகள், துணை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com