திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா

திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மொட்டையரசு உற்சவத்தையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான்.
மொட்டையரசு உற்சவத்தையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான்.
Published on

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவிலில் இருந்து சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரை மேள, தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத்தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.

இதனையடுத்து தங்கக்குதிரையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மொட்டையரசு திடல் வரை சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமி தரிசனம் செய்தனர். மொட்டையரசு திடல் சார்ந்த ஒரே இடத்தில் 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய திருக்கண்களில் சாமி எழுந்தருளினார்.

ஒவ்வொரு திருக்கண்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலையிலிருந்து மாலை வரை மொட்டையரசு திடலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் இரவு 9 மணி அளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி இருப்பிடம் நோக்கி சென்றார்.வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com