பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?

நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?
Published on

இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.

சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும்.

நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com