ராகு பகவானால் உண்டாகும் நோய்கள்

ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும். இப்போது ராகு பகவானால் உண்டாகும் நோய்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
ராகு பகவானால் உண்டாகும் நோய்கள்
Published on

ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து. அதற்கு அனுபவத்திலும் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஜோதிட மருத்துவத்தில் இருந்து விலகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொண்டு ராகு செய்யும் யோகம் பற்றி பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும். எதிர்பாராத வகையில் திடீர் தலைவர், திடீர் உயர் பதவி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும். ஆபத்தான காடு, மலைகளில் சுற்றிவருவார். கெட்ட நண்பர்கள் மூலமாக தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக் கொள்வார். புறம்போக்கு நிலம், அனாதை சொத்துகள் கைக்கு வரும். மாய, மந்திர வித்தைகள் மூலம் நினைத்ததை சாதிப்பார்.

பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை கற்றும், கொடூர மிருகங்களை வைத்து வித்தை காட்டியும் மகிழ்வார். நினைத்து பார்க்க முடியாத புதையல் கிடைக்கும். பல கோடி ரூபாய் களுக்கு பினாமியாக மாறுவது அல்லது கீழே கிடந்து எடுப்பது போன்றவை ராகுவால்தான் வாய்க்கும். தந்தை வழி, தாத்தா மற்றும் பாட்டி சொத்துகள் கைக்கு வரும். அந்நிய மொழி, இனத்தவர்களை திருமணம் செய்யும் யோகம், அதன் மூலம் ஆதாயம் பெற வைப்பது ராகு தான்.

ராகு கிரகம் தரும் நோய்கள்

நன்கு உயரமான, மெலிந்த ஒல்லியான உடலமைப்புக்கு காரணமானவர் ராகு பகவான். கண்களில் தூசி, துரும்பு பட்டு கண்ணீர் கசிய வைப்பது ராகுவே. மங்கலான பார்வைத் திறன், மருத்துவர்களால் அறியப்படாத புதுவகையான நோய்கள், காற்றில் பரவி வரும் நோய்கள், துஷ்ட கனவுகள், நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகு பகவான் தான் செய்கிறார்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றிற்கெல்லாம் பயப்பட செய்வது ராகு தான். விஷப்பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவது, சிறைவாசம் மூலம் பரவும் தொற்று நோய்கள், திடீர் என்று மனநிலை பாதித்ததுபோல் செய்யக்கூடிய காரியங்கள், விஷப் பாம்புகளுடன் பழகுவது, அவற்றுடன் வாழ்வது, விஷப் பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பது போன்ற செயல்களும் ராகுவால் தான் நடக்கின்றன.

பிறப்பு உறுப்புகளில் கிருமிகள் தாக்குவது, மூத்த வயதுடைய பெண்ணை பாலுறவு கொள்வதால் உண்டாகும் நோய், மாந்திரீகம், தாந்திரீகம், மாய மந்திரங்களால் உண்டாகும் கெடுதல், மருத்துவ பரிசோதனையில் கண்களுக்கு புலப்படாத நோய்களை வெளிக்காட்டி கொடுப்பது, விஷவாயு, ரசாயன வாயு, செப்டிக் டேங்க் வாயு, கிணறு வெட்டும் போது வெளிப்படும் விஷ வாயு மூலம் உண்டாகும் பாதிப்புகள், கடல் அலைகளில் சிக்கி மூழ்கி இறப்பது, ஒருவருக்கு வந்த கொடிய நோயானது தொற்றாக பரவுவது, பட்டாசு போன்ற ஆயுத கிடங்கு, துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைக்காரணமாக உண்டாகும் விபத்துகள், எதிர்பாராத விதமாக வாந்தி, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றவைகளுக்கு காரணமாக இருப்பவர் ராகு தான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com