பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 29-ந் தேதி மாலை கஜமுகா சூரசம்ஹாரமும், நேற்று முன்தினம் மாலையில் தேரோட்டமும் நடைபெற்றது. அன்று மாலை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 10-ம் திருநாளான நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி காலை 10 மணிக்கு உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தின் கரையில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அங்குச தேவருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடைபெற்றது.

இரவில் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது.

விழாவையொட்டி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அமராவதிபுதூர் ராம.அண்ணாமலைச் செட்டியார், தேவகோட்டை ராம.மீ.நாகப்பச் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com