

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, 9 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 11 மணிக்கு பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பகல் 12 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களால் சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும், மகா அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மீண்டும் மூலவருக்கு அபிஷேகம், சாயரட்சை பூஜை, மகா தீபாராதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து மாலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் திருவீதி உலா வந்தார். இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது. வைகாசி விசாகத்தையொட்டி நேற்று காலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.