

கடந்த வாரம் மதுரை கள்ளழகர் கோவிலில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதற்கு எழுந்தருளிய கள்ளழகருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, வஸ்திரம் அனுப்பி வைக்கப்பட்டன.
அதற்கு பதிலாக மதுரை அழகர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வஸ்திரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வழங்கப்பட்டது. அந்த வஸ்திரத்தையும் பட்டுப் புடவையையும் ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் ஆண்டாளுக்கு, ரெங்கமன்னாருக்கும் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் வைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டன. இதன்பின்னர் மதுரையில் அழகர் அணிந்திருந்த பட்டுப்புடவை மற்றும் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு ஆண்டாள் எழுந்தருளினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.