

அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான்.
அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.
நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார்.
அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.
அதைத் தொடர்ந்து மற்ற வேதங்களையும் சொல்கிறார்கள்.
வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார்.
இதோ, "திற" என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது.
பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின்றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.
ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது.
பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.
அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன்.
பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.