பிரமிக்க வைக்கும் பேராற்றல் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்

தமிழக மக்கள் அதுவும் குறிப்பாக தென் தமிழக மக்கள் அவரை சின்ன ஐயா என்று தான் அழைத்தார்கள். அரசியலில் இல்லாமலே அரசியல்வாதிகளின் மனம் கவர்ந்த தலைவராக சிவந்தி ஆதித்தனார் இருந்தார்.
பிரமிக்க வைக்கும் பேராற்றல் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்
Published on

ஒரு காலத்தில் தமிழகத்தின் திரைப்படத் துறையில் சின்னவர் என்ற பெயருக்குச் சொந்தக்காரராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்தார்கள். ஒட்டுமொத்த தமிழ்த் திரை உலகமே அவரை சின்னவர் என்றுதான் அழைக்கும்.

அதற்கு இணையாக "சின்ன ஐயா" என்ற ஒருவர் தமிழகம் முழுக்க அறியப்பட்டார், அழைக்கப்பட்டார் என்றால் அது ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களை தான் குறிக்கும்.

தமிழக மக்கள் அதுவும் குறிப்பாக தென் தமிழக மக்கள் அவரை சின்ன ஐயா என்று தான் அழைத்தார்கள். அந்த அளவிற்கு மக்களின் அன்பிற்குரியவராக, மரியாதைக்குரியவராக திகழ்ந்தார் என்றால் அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

திருக்குறளில் வள்ளுவன் சொல்கிறார்,

"தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்."

என்று சொல்கிறார்.

ஒரு மனிதன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை தெரிந்து கொள்வதற்கு அவன் எத்தகைய விஷயங்களை விட்டு சென்றான் என்று தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் பத்திரிகைத் துறையில் பத்திரிகை சாம்ராஜ்ய அதிபதியாக இருந்த ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தியை 1947லில் தொடங்கி, எளிய மக்களையும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்.

தினத்தந்தி பத்திரிகை தான் ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களை வள்ளுவர் வரையறையின்படி தக்கார் என்று முடிவு செய்த வரலாற்று நிகழ்வுகள்.

தன் தந்தை ஆதித்தனார் அவர்களது காலத்தில் மூன்று இடங்களிலிருந்து பதிப்புகளாக வந்த தினத்தந்தி நாளிதழ், சிவந்தி ஆதித்தனார் அவர்களது தலைமையின் கீழ் இன்று தமிழகத்தில் பதினைந்து நகரங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து வெளிவருகிறது.

15 நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வெளிவருகிறது என்றால் தனது தந்தையின் சாம்ராஜ்யத்தை மகன் எந்தளவு விரிவு படுத்தியிருக்கிறார் என்பது தெரியும்.

இராம ஸ்ரீநிவாசன்
இராம ஸ்ரீநிவாசன்

இராம ஸ்ரீநிவாசன்

இன்றைக்கும் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் என்ற பெயரை தினத்தந்தி தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடவுள் கொடுத்த கொடை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள். அவர் மட்டும் அங்கு கல்வி நிறுவனங்களை தொடங்கியிராவிட்டால் அப்பகுதி இன்னும் கூட பின்தங்கியிருக்கும்.

இப்ப எல்லாம் கல்வித்துறையில் சம்பாதிப்பதற்காகவே நிறையபேர் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆதித்தனார் அவர்கள் சம்பாதித்தது எல்லாம் வேறு வேறு துறைகள். சம்பாத்தியத்தை செலவிட்டதெல்லாம் இந்த கல்லூரிகளில் தான். இப்படி சேவை நோக்கில் கல்விப்பணி செய்தவர் ஆதித்தனார் அவர்கள்.

திருச்செந்தூரில் சி.பா. ஆதித்தனார் அவர்கள் நிறுவியது ஆதித்தனார் கல்லூரி. ஆனால் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடிப் பாயும் என்பதை போல மகன் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்கள் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் உடல் கல்வியியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி என்று பல்வேறு கல்லூரிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கினார் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு எவ்வளவு பெரிய வரமாக அமைந்தது என்பதை வரலாறு சொல்லும்.

நான் ஆதித்தனார் கல்லூரியில் படித்த மாணவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த கல்லூரிகளிலும் பார்க்க முடியாத சிறப்புகளை ஆதித்தனார் கல்லூரியில் பார்க்க முடியும். அவர்கள் காந்திய சிந்தனையை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் கொண்ட காரணத்தினால், எங்கள் ஊர் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியில் இருந்து ஆண்டுதோறும் பத்து பதினைந்து மாணவர்களாவது ஆதித்தனார் கல்லூரியில் வந்து சேருவார்கள். அந்த வகையில் தான் நானும் இங்கு வந்து படித்தேன்.

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் ஸ்காலர்ஷிப் தருவது என்பது நமக்கெல்லாம் தெரியும். இதைவிட ஆதித்தனார் கல்லூரியில் தருகிற மேனேஜ்மென்ட் ஸ்காலர்ஷிப் பல மடங்கு அதிகமாக இருக்கும். சாதி மத இன வேறுபாடின்றி நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தினுடைய சிண்டிகேட் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் அவரது கல்விப் பணிக்கு பல்கலைக் கழகங்கள் கொடுத்த நற்சான்றிதழ்.

விளையாட்டுத்துறையிலேயும் சிவந்தி ஆதித்தனாரது பங்கு அளப்பரியது. அவர் அகில இந்திய ஒலிம்பிக் சங்கத்தினுடைய தலைவராக இருந்தார். ஆசிய கைப்பந்து விளையாட்டுச் சங்கத்தினுடைய தலைவராக இருந்தார். அகில இந்திய கராத்தே அமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்தார்.

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் அவரது சேவையைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23 அன்று அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எனபது நினைவு கூறத்தக்கது.

அதேப்போல அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் இவை எல்லாம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி தங்களுக்கு பெருமை சேர்த்துக்கொண்ட பல்கலைக்கழகங்கள்.

பல்வேறு துறைகளிலும் அவரது பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசாங்கம் 2008 ஆண்டில் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு "பத்மஸ்ரீ" விருது வழங்கியது.

1982-83 ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகரின் ஷெரிப் ஆக ஒரு கவுரவப் பதவியை கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக பணிகளை ஆர்வத்துடன் செய்வதிலும் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் குறை வைக்கவில்லை. ஏராளமான கோவில் திருப்பணிகளைச் செய்தவர். குறிப்பாக அவர் தென்காசி கோவில் இராஜ கோபுரத்தைக் கட்டிய அந்த வரலாறு இன்னமும் பேசப்படுகிற வரலாறாக இருக்கிறது. அதனால் அவர் இன்றும் அந்த பகுதி மக்களால் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்றே அழைக்கப்படுகிறார்.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ல் சிவந்தி ஆதித்தனார் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றார் என்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்தான், ஆனாலும் அவர் நினைவில் இன்று தமிழகம் வாழ்கிறது என்பதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பை சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வாழ்வை பாராட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அவருக்கென்று ஒரு மணி மண்டபத்தையும் திருஉருவச்சிலையும் அமைத்திருக்கிறது என்பது அவருடைய வாழ்நாள் பங்களிப்பு எத்தகையது என்பதை நமக்குக் காட்டுகிறது.

சிவந்தி ஆதித்தனாரின் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள் அரசியலிலும் ஆர்வம் உள்ளவர், அரசியல் பணியும் செய்தவர். தன் தந்தை ஆர்வம் காட்டிய அளவிற்கு அரசியலில் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் கூட தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்களுக்கெல்லாம் அவர் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய தலைவராக இருந்தார். அரசியலில் இல்லாமலே அரசியல்வாதிகளின் மனம் கவர்ந்த தலைவராக சிவந்தி ஆதித்தனார் இருந்தார்.

நான் கல்லூரி மாணவனாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளில் படித்த போது சிவந்தி ஆதித்தனார் ஐயா அவர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு திரைப்பட கதாநாயகனுக்கு உரிய தோற்றப் பொலிவு, பார்த்தால் யாரையும் வசீகரிக்கிற ஒரு ஆளுமை, தன்னை சந்திக்க வரும் மக்களுக்கெல்லாம் அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து வாரி வழங்குகிற வள்ளல் குணம், குறிப்பாக கல்லூரிக்கு கல்விக்காக அவர் தாராளமாக வழங்குகிற நிதி, இவை எல்லாம் என்னை இளம் வயதிலேயே பிரமிக்க வைத்த நிகழ்வுகள்.

அவரிடம் ஒரிருமுறை பேசியும் இருக்கிறேன். அப்போது எனக்கு குறைந்த வயது. அதிகமாக உரையாடியது இல்லை. என்றாலும் கூட நிறைந்த மன நிறைவை என்றும் தருகிற நினைவலைகளோடு தான் நான் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com