

சார்ஜா:
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2 டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இன்று சார்ஜாவில் உள்ள மைதானத்தில் தொடங்கிய முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹமில்டன் மசகாட்சா, சலொமன் மிரே ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய சலொமன் மிரே 21 பந்துகளில் 34 ரன்கள் (5 பவுண்டரி, 2 கிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மசகாட்சா 18 ரன்களில் குலாப்தின் நயிப் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்கீப்பர் பிரண்டன் டெய்லர் 3 ரன்களிலும், சிகந்தர் ரசா 1 ரன்களிலும், ரயான் பர்ல் 8 ரன்களிலும், பீட்டர் மூர் 2 ரன்களிலும், கிரேம் கிரீமர் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மால்கோம் வாலர் சற்று நிலைத்து நின்று விளையாடினார். இருப்பினும் எதிர்முனையில் களமிறங்கியவர்கள் ரன்குவிக்க தவறினர்.
ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் எடுத்தது. மால்கோம் வாலர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட்களும், ஷரஃபுதின் அஷ்ரப் 2 விக்கெட்களும், அஃப்தப் ஆலம், குல்பாதின் நயிப், மொகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. #AFGvZIM #Afghanistan #Zimbabwe