

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் நாராயண ரெட்டி (வயது 73). இவரது சமையல் நிகழ்ச்சி யூ டியுப் சேனலில் மிகவும் பிரபலமானது. யூ டியூபில் இவரது கிராண்ட்பா கிச்சன்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு சுமார் 60 லட்சம் பேர் பாலோவர்ஸ் உள்ளனர்.
ஒரு முழு ஆட்டை பயன்படுத்தி அவர் பிரியாணி செய்துள்ள வீடியோ இன்றும் பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது. நொறுக்குத் தீனிகள் முதல் அசைவ உணவுகள் வரை கிராமத்து மணத்துடன் இவர் செய்யும் சமையலை லட்சக்கணக்கானோர் விரும்பி பார்க்கின்றனர்.
மேலும், சாக்லேட் கேக், பீட்சா போன்றவற்றையும் சமைத்து அசத்துவார். தான் சமைக்கும் உணவு வகைகளை ஆதரவற்றோருக்கு அளித்து மகிழ்வார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நாராயண ரெட்டி, கடந்த மாதம் 27ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு அவரது யூ டியூப் அபிமானிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பலர் தங்களது இரங்கலை இணைய தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.