ஆம்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ஆம்பூர் அருகே கந்து வட்டி கொடுமையால் வாலிபர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்துவட்டி கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
கந்துவட்டி கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாராபட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம். 100 நாள் வேலைதிட்ட தொழிலாளி. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 22). வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். தாய் மல்லிகா தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் குடும்ப வறுமை காரணமாக அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டை 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து உள்ளனர். 24 மாதங்கள் தலா ரூ.7,500 விகிதம் தவணை கட்ட வேண்டும்.

கடந்த 15.4.2020 அன்று தவணை முடிவடைந்த நிலையில், சில மாதங்களாக தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு நிதி நிறுவனத்தில் இருந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்த சிரஞ்சீவியை அவதூறாக பேசி, 2 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிரஞ்சீவி நேற்று காலை வாணியம்பாடி- மாரப்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று சிரஞ்சீவி உடலை பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிரஞ்சீவியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், சிரஞ்சீவியின் உடலை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் ஆம்பூர் தாலுகா போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கந்து வட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு, சிரஞ்சீவியின் உடலை அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com