

அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவில் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெகந்நாதன் மகன் ஜெயராஜ் (வயது 21). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று ஜெகந்நாதன் வீட்டில் ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தார். அதனை அவரது மகன் ஜெயராஜ் எடுத்து செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதனை ஜெகந்நாதன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயராஜ் வீட்டில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
உடனடியாக அவரை மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.