போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்த 3 வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்த 3 வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலை தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மகள் உமா(வயது 20). இவர் கட்டிமேட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அதே தெருவை சேர்ந்த முருகையன் மகன் வெற்றிவேலுக்கும்(25), உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம், பக்கத்தினர் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு உமா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வெற்றிவேல் மற்றும் அவருடைய நண்பர்களான சுந்தரபாண்டி(22), கோகுல்(22) ஆகியோர் உமாவின் உறவினரான வடபாதியை சேர்ந்த கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த உமா, வெற்றிவேல் உள்ளிட்ட 3 பேரிடமும், எனது உறவினரிடம் என்ன பேசினீர்கள்? என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாவை தாக்கினர்.

இதில் காயமடைந்த உமா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.

போலீசார் தங்களை தேடுவதை அறிந்த வெற்றிவேல் உள்பட 3 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து கழிவறையை சுத்தம் செய்யும் ‘ஆசிட்’டை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com