செல்போனில் புதிய செயலியை பயன்படுத்தி 80 பெண்களின் அந்தரங்க தகவல்களை திருடிய பட்டதாரி வாலிபர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போனில் புதிய செயலியை பயன்படுத்தி 80 பெண்களின் அந்தரங்க தகவல்களை திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தினேஷ்குமார்
தினேஷ்குமார்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரி.

அந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார் அந்த பெண்.

அந்த ஸ்மார்ட் போனில் டிராக் வியூ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அந்த டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை செய்துள்ளார்.

அந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார்.

அவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். பணியாவிட்டால் அந்தரங்க காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

அதனை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளார். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

உடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூ ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்து 2 மடி கணினிகள், 3 செல்போன்கள், பெண்களின் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்த போது கல்லூரியில் படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ் குமாரை அடித்து விரட்டி உள்ளனர். அப்போது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

அதன்பின்னர் தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடி கணினியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.

அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

தினேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான். இதனால் அவனை யார் என அடையாளம் காணமுடியாமல் பல பெண்கள் தவித்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்களும் , கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தினேஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com