பெண்ணாடம் அருகே வாலிபர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பெண்ணாடம் அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம் அருகே வாலிபர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
Published on

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 24). விவசாயி.

இவர் நேற்று மாலை பெண்ணாடத்துக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

பெண்ணாடம் மாளிகை கோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வேல்முருகன் சென்றார். அங்கு மது வாங்கி குடித்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக மாளிகை கோட்டத்தை சேர்ந்த வேல்முருகனின் நண்பர் விமல் மினி லாரியில் வந்தார்.

டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த வேல்முருகனை பார்த்ததும் விமல் மினி லாரியை விட்டு கீழே இறங்கி அவரையும், மொபட்டையும் மினி லாரியில் ஏற்றிக் கொண்டு வேல்முருகனின் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த விவரத்தை விமல் கூறினார். பின்னர் அவர்கள் வேல்முருகனை மினி லாரியில் இருந்து கீழே இறக்கியபோது அவர் இறந்து விட்டதை அறிந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகனின் குடும்பத்தினர் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து வேல்முருகனின் பெற்றோர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனின் நண்பர் விமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com