சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற காமுகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
ராஜ்குமார்
ராஜ்குமார்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி தனது பாட்டியுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு அவர் ரேசன் கடைக்கு சென்றார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் (வயது 17) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான். தனது பேத்தியை அங்கன்வாடி மையத்தில் கொண்டு விடும் படி கூறினார். ஆனால் ராஜ்குமார் குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விடாமல் கிணத்துப்பட்டி அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த தோடு, கொலுசு போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். குழந்தையின் உடல் மீது ராஜ்குமார் கற்களை அடுக்கி வைத்து சென்று விட்டான்.

குழந்தையை காணாமல் உறவினர்களும் பெற்றோர்களும் பல இடங்களில் தேடினர். அய்யலூரில் சுற்றிக் கொண்டு இருந்த ராஜ்குமாரை பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியை கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் சிறுமியை கற்பழித்து கொலை செய்த ராஜ்குமார் மீது 363, 302, 201, 379, 5 எம் (6) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவன் அடைக்கப்பட்டான்.

இது குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தெரிவிக்கையில், ராஜ்குமார் மீது வடமதுரை காவல் நிலையத்தில் மட்டும் 3 திருட்டு வழக்குகள் உள்ளது. சம்பவம் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வந்தான். பின்னர் மீண்டும் தன்னை திருத்திக் கொள்ளாமல் இருந்ததால் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். இந்த வழக்கு இளைஞர் நீதிமன்றத்தில் நடந்து வந்தால் தீர்ப்பு கிடைக்க தாமதம் ஆகும். எனவே குற்றவாளி ராஜ்குமார் முழு ஆண்மை தன்மை உடையவர் என்பதை கொண்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 வருடத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com