

கோவை:
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 24). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மாதத்தில் ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சிந்து தனது கணவரிடம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். ஆனால் மணிகண்டன் பொருட்களை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதில் மனவேதனை அடைந்த சிந்து, தனது 2 மாத குழந்தையுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து தனது கைக்குழந்தைக்கு பாலில் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் குடிந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
வீட்டில் தாயும், குழந்தையும் மயங்கி கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தாயையும், குழந்தையையும் மீட்டு பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிந்து, ஜஸ்வந்த் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 மாத கைக்குழந்தைக்கு தாய் விஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.