அம்பையில் இன்று இளம்பெண் வெட்டிக்கொலை- டீக்கடைக்காரர் கைது

அம்பையில் இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பையில் இன்று இளம்பெண் வெட்டிக்கொலை- டீக்கடைக்காரர் கைது
Published on

சிங்கை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் சுந்தரி (வயது 37). இவருக்கு திருமணமாகி பிரகாஷ்(8), நரேன்(4) என்ற மகன்கள் உள்ளனர். சுந்தரியின் தங்கை ராமலெட்சுமி என்கிற ரமா. சகோதரிகள் இருவரும் பிரம்மதேசத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சண்முகவேல் (62). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இவர்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று காலை சண்முகவேலுக்கும், சுந்தரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சண்முகவேல் திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் சுந்தரியை சரமாரியாக வெட்டினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி ரமா இதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் வெட்டு விழுந்தது. இதன் பின்னர் மீண்டும் சுந்தரியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து சண்முகவேல் தப்பி சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த சுந்தரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ரமாவை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பலியான சுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சண்முகவேலை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அம்பை போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், எதற்காக சுந்தரியை கொலை செய்தார்?. என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் இறந்தது தெரியாமல் சுந்தரியின் குழந்தைகள் பரிதவித்தபடி நின்றது பரிதாபமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com