குண்டுவெடிப்பில் பார்வையிழந்த மாணவருக்கு மீண்டும் பார்வை கொடுத்த இந்திய மருத்துவர்கள்

ஏமனில் நடந்த குண்டு வெடிப்பில் இருகைகள் மற்றும் பார்வையை முழுவதுமாக இழந்த மாணவருக்கு கொச்சி மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒரு கண்ணில் பார்வை கிடைத்துள்ளது.
குண்டுவெடிப்பில் பார்வையிழந்த மாணவருக்கு மீண்டும் பார்வை கொடுத்த இந்திய மருத்துவர்கள்
Published on

கொச்சி:

ஏமனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மத்திய ஏமனை சேர்ந்த இஸ்லாம் உசைன் என்ற 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட கன்னி வெடியில் சிக்கி, இரு கைகள் மற்றும் இரு கண் பார்வையை இழந்தார். மேலும், கால்களிலும் பலமாக அடிபட்டதால் நடப்பதும் சிரமாகியது.

இதனை அடுத்து, தனது மகனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என உறுதி கொண்ட உசைனின் பெற்றோர் முதலில் சிகிச்சைக்காக எகிப்து சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்த உசைன் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உசைனின் கால்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர்.

பின்னர், கேரளாவின் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை உசைனுக்கு சமீபத்தில் நடந்துள்ளது. எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், உசைனின் இடது கண்ணில் தற்போது மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.

“நான் முழுவதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், மருத்துவர்கள் என்னை உற்சாகமூட்டிக்கொண்டே இருந்தனர். சிகிச்சைக்கு பின்னர் எனது அம்மாவை பார்த்தேன். அது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தந்தது” என உசைன் கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com