அரசு அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டிய எழுத்தாளர் துரைகுணா கைது

கறம்பக்குடி பகுதிகளில் அரசு அதிகாரிகளை கண்டித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஓட்டிய எழுத்தார் துரைகுணாவை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த எழுத்தாளர் துரை குணா. சமூக ஆர்வலரான இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனிநபர்களால் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முருகன் கோவில், ஆதி பராசக்தி கோவில்களை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்தில்லா நெடுஞ்சாலையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதையடுத்து எழுத்தாளர் துரைகுணா சார்பில் கறம்பக்குடி பகுதிகளில் அரசு அதிகாரிகளை கண்டித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

அதில், கறம்பக்குடி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனிநபர்களால் கட்டப்பட்ட வழிபாட்டு தல கட்டிடங்களை அரசாணை நிலைப்படி அகற்றுவது எப்படி? என்றும் கீழ்க்கண்ட நபர்களுக்கு கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய்கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு ஒருநாள் நாள் பயிற்சி வகுப்பு எடுக்கப்படும். இடம்,கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பாதுகாப்பான அரங்கம். கறம்பக்குடி என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் எழுத்தாளர் துரைகுணா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து துரைகுணா மீது, அரசு அதிகாரிகள் பற்றி அவதூறு பரப்பியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை துரைகுணாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக துரைகுணா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com