உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்

அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் கிரிக்கெட் மைதானம்
அகமதாபாத் கிரிக்கெட் மைதானம்
Published on

மும்பை:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.

1982-ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள மொதேராவில் சர்தார்பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இங்கு 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த ஸ்டேடியத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிகிறது. தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

அகமதாபாத்தில் உள்ள இந்த கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக கருதப்படுகிறது.

ரூ.700 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானம் தான் இதற்கு முன்பு பெரிய ஸ்டேடியமாக இருந்தது. அங்கு 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன.

அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். அவர்கள் 2 மணி நேரம் அந்த ஸ்டேடியத்தை சுற்றி பார்த்தனர்.

ஸ்டேடியத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து குஜராத் மாநில சங்க நிர்வாகிகள், கங்குலிக்கு எடுத்துரைத்தனர்.

இந்த ஸ்டேடியத்தில் தொடக்க ஆட்டமாக ஆசிய லெவன்- உலக லெவன் அணிகள் மோதும் காட்சி போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) கேட்டுள்ளதாக கங்குலி தெரிவித்தார். ஐ.சி.சி. ஒப்புதல் அளித்தால் இந்த போட்டி மார்ச் மாதம் இந்த ஸ்டேடியத்தில் நடத்தப்படும்.

இந்த ஸ்டேடியத்தில் 70 கார்ப்பரேட் பாக்ஸ், 4 டிரெஸ்சிங் அறை (வீரர்கள் இருக்கும் பகுதி), ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com