

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா.
எத்தியோப்பியாவின் வடக்கே அம்ஹாராவின் டெஸ்ஸி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபாவை நோக்கி ஒரு பயணிகள் பேருந்து நேற்று பயணித்துக்கொண்டிருந்தது.
பேருந்து கொம்போல்சா எல்லைக்குட்பட்ட மலைப்பாங்கான வளைவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென செங்குத்தான பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்கள்களில் 31 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அளவுக்கு மீறி ஆட்கள் பஸ்சில் இருந்துள்ளனர்.
மேலும் உள்நாட்டு மோதல்களால் அப்பகுதியில் போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுக்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
அங்கிருந்த உள்ளூர் மக்களே களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு அவ்வழியே வரும் வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
உரிய நேரத்தில் முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தினாலேயே உயிரிழப்பு எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக உயர்ந்ததாக தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியாவில் மோசமான சாலைகளால் சாலை விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு சிடாமா பகுதியில் ஒரு பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.