search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரபல பாடகியின் போலி வீடியோ: அரசு தீவிர நடவடிக்கை
    X

    பிரபல பாடகியின் போலி வீடியோ: அரசு தீவிர நடவடிக்கை

    • ஏஐ மூலம் மிகவும் எளிதாக இத்தகைய வீடியோக்களை தயாரிக்க முடிகிறது
    • முறையான சட்டங்கள் இல்லாததால் பாதிப்படைந்தவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்

    பிரபலங்களை மையமாக வைத்து பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோக்களின் மூலம் தவறான செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

    டீப் ஃபேக் (deep fake) எனப்படும் இத்தகைய வீடியோக்கள் டிஜிட்டல் முறையில் ஃபேஸ் ஸ்வேப்பிங் (face swapping) எனப்படும் முகமாற்று முறையில் தயாரிக்கப்படுபவை.

    ஆனால், சமீப சில மாதங்களாக ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் அத்தகைய வீடியோக்களை உருவாக்குதல் மிக எளிதாகி வருகிறது. இணையத்தில் பல வலைதளங்கள் இத்தகைய வீடியோக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் தந்து உதவுகின்றன.

    ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையத்திலோ பொதுவெளியிலோ உள்ள எவரது முகத்தையும் வேறு ஒருவரது முகத்தில் பொருத்தி தத்ரூபமாக ஒரு பொய்யான வீடியோவை தயாரிக்க முடியும். இவற்றை பொய்யானவை என கண்டறிவது சுலபமும் அல்ல. மேலும், இவற்றை நீக்கும் முயற்சியும் நீண்ட நேரம் ஆவதால், இவற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    பெண்களை, அதிலும் குறிப்பாக பிரபலமான பெண்களை குறி வைத்து இவை உருவாக்கப்படுவது அரசாங்கங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் முன்னணி பாடகியான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) குறித்த அத்தகைய வீடியோ வைரலானது.

    இந்த பொய் வீடியோ, எக்ஸ் சமூக வலைதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "பொய்யான வீடியோக்கள் மிகவும் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சிக்கலை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசு உடனடியாக செய்யும். பயனர்கள் இத்தகைய வீடியோக்களை பொய்யானவை என எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றில் குறியீடுகளை செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த ஏஐ நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என தெரிவித்தார்.

    ஏஐ தொழில்நுட்பத்தால் பெருகி வரும் இத்தகைய உள்ளடக்கங்களை கையாள்வது சமூக வலைதளங்களுக்கும் சிக்கலாக இருக்கிறது. இவற்றை உடனடியாக நீக்குவது இந்நிறுவனங்களின் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக உள்ளது.

    Next Story
    ×