

உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.
எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.
இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.