

ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தமது சமூக வலைதளமான Truth Social-இல் இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஒரு ஒப்பந்தத்திற்கான அடிப்படை வரைமுறைகள் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகவும் முழுமையாகவும் திறக்க வேண்டும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த அமைதி முயற்சிக்கு இஸ்ரேல் நாடும் ஒப்புதல் அளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் ரத்து செய்யப்பட்டாலும், ஈரான் மிக விரைவாக இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் டிரம்ப் விதித்துள்ளார். "உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன். ஆனால், இந்த ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வேண்டும். அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன" என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா தாக்குதலைத் தீவிரப்படுத்த ஆயத்தமான நிலையில், சவுதி இளவரசர் முஹம்மது பின், டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியிருந்தது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் தலையீட்டால் இந்த பேச்சுவார்த்தை சூழல் உருவாகியுள்ளது. ஒப்பந்தம் விரைவாக முடிவுக்கு வராவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என்பதை டிரம்ப் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.