சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.
சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்
Published on

ரியாத் :

உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.

அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.

அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.

இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com