search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மின்சார தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்- கடைகள், உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூட முடிவு
    X

    (கோப்பு படம்)

    மின்சார தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்- கடைகள், உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூட முடிவு

    • 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்ய நடவடிக்கை.
    • அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்று கொள்ள அமைச்சர் வலியுறுத்தல்.

    இஸ்லாமாபாத்:

    கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. தற்போது புதிதாக மின்சார உற்பத்தி பாதிப்பு பிரச்சினையும் தலைதூக்கி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தான் எரிசக்திதுறை அதிக நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அறிவித்தார். இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளதாவது:


    புதிய திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள சந்தைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம். 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்தால், ரூ.62 பில்லியன் வரை சேமிக்க முடியும், ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகள் மற்றும் பல்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    பெட்ரோல் நுகர்வைக் குறைக்க பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிலாக மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக மின்சார பைக்குகள் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைக்க உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அன்றாட நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். விரயம் செய்யும் கலாச்சாரத்தை இனி எங்களால் தாங்க முடியாது, அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாடு தழுவிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாகாணங்களை அணுகும், வியாழக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×